தினமணி 27.03.2010
டி.வி.எஸ். நகருக்கு மாற்றுப் பாதை: மாநகராட்சி மேயர், ஆணையர் ஆய்வு
மதுரை, மார்ச் 26: ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறவுள்ளதால் மதுரை டி.வி.எஸ். நகருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுப் பாதையை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி மற்றும் ஆணையர் எஸ்.செபாஸ்டின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் ஆணையர் எஸ்.செபாஸ்டின் கூறியது:
மதுரை டி.வி.எஸ்.நகரில் உள்ள ரயில்வே கேட்டில் ரயில்வே நிர்வாகத்தின் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதனால் ஏப்ரல் 1}ம் தேதி முதல் இப்பாதை மூடப்படுகிறது.
இதையடுத்து மேயர் முத்துப் பாலம் அடியில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. எனவே பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாலத்தின் வலது புறம் செல்லவும், டி.வி.எஸ்.நகரிலிருந்து வரும் வாகனங்கள் பாலத்தின் இடது புறம் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ஆய்வின்போது தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி ஆணையர்கள் (வருவாய்) ரா.பாஸ்கரன், தேவதாஸ், நிர்வாகப் பொறியாளர் சேதுராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்