தினமணி 30.03.2010
தெரு விளக்குகள் பராமரிப்புக்கு ரூ.20 லட்சம்
திருவள்ளூர், மார்ச் 29: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் தெரு விளக்குகள் பராமரிப்பு மற்றும் பழுது பொருள்கள் வாங்க 2010-11-ம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் நகர்மன்றக் கவுன்சிலர்கள் கூட்டம் நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடந்தது.
இக்கூட்டததில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் முத்துராமஸ்வரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், காக்களூர் சாலையில் உள்ள குட்டையில் ஆக்கிரமிப்பை அகற்றி அதை தூர்வாரி ஆழப்படுத்தி கரை அமைக்க வேண்டும். ராஜாஜி சாலை, வேம்புலி அம்மன் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க வெள்ளியூர் குடிநீர் பகிர்மான குழாய் அமைத்தல். முகமதலி தெரு மற்றும் சந்துகளில் விரைவாக பாதாள சாக்கடைப் பணியை முடித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், திருவள்ளூர் நகராட்சியில் நகராட்சி பராமரிப்பில் உள்ள 1 முதல் 17 வார்டுகளில் 2010-11-ம் ஆண்டுக்கான தெருவிளக்குகள் பராமரிப்பு, மின் உதிரி பாகங்கள் வாங்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானமும், தனியாரின் பராமரிப்பில் உள்ள மற்ற 10 வார்டுகளிலும் தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் பழுது பார்க்க ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.