தினமலர் 01.04.2010
தூத்துக்குடி மாநகராட்சியில் கோடை குடிநீர் பிரச்னையை சமாளிக்க புதியதாக 2 ஜெனரேட்டர்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கோடையில் குடிநீர் பிரச்னை வராமல் சமாளிப்பதற்காக புதியதாக இரண்டு ஜெனரேட்டர்கள் வாங்கப்படுகிறது. தூத்துக்குடியில் கோடை வெயிலின் உக்கிரம் இப்போதே மிக அதிகமாக இருந்து வருகிறது. வெயில் காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக குடிநீர் செலவாகும். ஆனால் கோடை காலத்தில் குடிநீர் வரத்தும் குறையும். இருப்பினும் தூத்துக்குடி மாநகராட்சியில் கோடை காலத்திலும் எப்போதும் போல் மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மின் தடை காரணமாக குடிநீர் சப்ளையில் ஏற்படும் பிரச்னையை தவிர்க்கும் வகையில் மாநகராட்சிக்கு கூடுதலாக 2 ஜெனரேட்டர் வாங்கப்படுகிறது.தூத்துக்குடி ராஜாஜி பூங்கா குடிநீர் தொட்டியில் தற்போது 250 கே.வி ஜெனரேட்டர் இருக்கிறது. இங்கு 320 கே.வி ஜெனரேட்டர் வாங்கி அங்கு வைக்கப்படுகிறது. அடிஷனலாக 250 கே.வி ஜெனரேட்டர் அங்கு இருக்கும் வகையில் செய்யப்படுகிறது.
இதுவரை ஜெனரேட்டர் இல்லாமல் இருக்கும் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஜி.எல். ஆர் குடிநீர் தொட்டிக்கு புதியதாக 75 கே.வி ஜெனரேட்டர் வாங்கப்படுகிறது. இந்த இரண்டு ஜெனரேட்டர்களையும் உடனடியாக வாங்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆற்றில் குடிநீர் வரத்து குறைந்து வருவதால் எப்போதும் போல் தூத்துக்குடி மாநகராட்சிக்கு எடுக்கும் குடிநீர் அளவை அப்படியே எடுக்கும் வகையில் மாநகராட்சி வல்லநாடு தலைமை நீரேற்றும் நிலையத்தில் குடிநீர் வரத்தினை மேம்படுத்தும் வகையில் சில பணிகள் மேற்கொள்ளும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளும் பணி துவங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 10 குடிநீர் உறிஞ்சு கிணறுகளை சுற்றி தண்ணீர் வரத்தை அதிகமாக்கும் வகையில் ஜே.சி.பி மூலம் தோண்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி முடிந்தால் எப்போதும் போல் தூத்துக்குடி மாநகராட்சிக்கு எடு க்க கூடிய குடிநீரை எடுத்துவிடலாம். இதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.