தினமலர் 05.05.2010
அத்தாணியில் புதிய பாலம் திறப்பு விழா
அந்தியூர்: அந்தியூரை அடுத்த அத்தாணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் திறப்பு விழா மற்றும் பவானியில் ரூ. 5.34 கோடியில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.கடந்த ஓராண்டுக்கு முன், அந்தியூரை அடுத்த அத்தாணியிலிருந்து கோபி செல்லும் வழியில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே ரூ. 4.48 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணி துவங்கியது. தற்போது நிறைவுபெற்று நேற்று திறப்பு விழா நடந்தது.
நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலாஜி வரவேற்றார். அந்தியூர் எம்.எல்.ஏ., குருசாமி முன்னிலை வகித்தார். அந்தியூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடாச்சலம், பவானி ஒன்றியக்குழு தலைவர் நல்லசிவம் ஆகியோர் பேசினர். ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், புதிய பாலத்தை திறந்து வைத்தார். மற்றொரு புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது: பவானி ஆற்றின் குறுக்கே தளவாய்பேட்டை வைரமங்கலம் இடையே ரூ. 5.34 கோடி மதிப்பில் கட்டப்படும் பாலத்தால், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்வது குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்த மூன்று ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற சாலைகளும் இரு வழி பாதையாக மாற்றப்படும்.
அத்தாணியிலிருந்து அந்தியூர் வரை சாலை அகலப்படுத்த உத்தரவு பெறப்பட்டுள்ளது. அம்மாபேட்டை வரையிலும் மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அந்தியூர் எம்.எல்.ஏ., குருசாமி, டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடாச்சலம் ஆகியோர், வரட்டுப்பள்ளத்திலிருந்து பர்கூர் வழியாக கர்கேகண்டி வரை உள்ள சாலையை இரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். பவானிசாகர் எம். எல். ஏ., சுப்பிரமணியம், அத்தாணி டவுன் பஞ்சாயத்து தலைவர் செந்தில்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.