தினமணி 13.04.2010
பல்லாவரத்தில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம்
தாம்பரம், ஏப். 12: பல்லாவரத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.
சென்னை புறநகர் பகுதிகளான புழுதிவாக்கம், திருநீர்மலை மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இருந்து புறப்படும் 8 புதிய பஸ் வழித்தடங்களை, அமைச்சர் தா.மோ. அன்பரசன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியது:
பல்லாவரத்தில் 159 கி.மீ. தூரத்துக்கு பாதாள சாக்கடைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 147 கி.மீ. தூர பணிகள் நிறைவடைந்துள்ளன. செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.
மேலும் ரூ. 40 லட்சம் செலவில் பல்லாவரம் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுவதோடு, புதிய தார்ச் சாலையும் அமைக்கப்படும் என்றார். மாநகர போக்குவரத்துக் கழக இயக்குனர் பால்ராஜ், இணை இயக்குனர் பாபு, பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் இ.கருணாநிதி, பம்மல் நகர்மன்றத்தலைவர் வெ.கருணாநிதி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
பின்னர், தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் மிஸ்ரா, புறநகர் காவல்துறை கமிஷனர் ஜாங்கிட் ஆகியோருடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.