தினமணி 16.04.2010
சங்கரன்கோவிலில் நவீன ஆடு அறுப்புக் கூடம் திறப்பு
சங்கரன்கோவில், ஏப். 15: சங்கரன்கோவிலில் நவீன ஆடு அறுப்புக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய பஸ்நிலையம் அருகில் ரூ.20 லட்சம் செலவில் நவீன ஆடு அறுப்புக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை நகராட்சித் தலைவர் பார்வதிசங்கர் திறந்து வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சங்கரன்கோவிலில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஆடு அறுப்புக் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இனி ஆடுகளை சாலையில் அறுக்கக் கூடாது.
கால்நடைமருத்துவர் பரிசோதனைக்குப் பின்னரே ஆடுகள் அறுக்கப்படும். இதற்காக கால்நடை மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சோலார் மூலம் இந்த ஆடு அறுப்புக் கூடம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. கறிகளை கழுவுவதற்கு சுடுதண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இறைச்சிக் கடைகளை ஒரே இடத்தில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஆடு அறுப்பதற்கான கூலி தொடர்பாக, நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு, நகராட்சித் துணைத் தலைவர் சங்கரன், சுகாதார அதிகாரி குருசாமி, ஓவர்சியர் பட்டுராஜ், நகராட்சி உறுப்பினர் நடராஜன், முகம்மதுஅலிஜின்னா, சங்கரமகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.