தினமணி 17.04.2010
விமான நிலைய விரிவாக்கப் பணிகள்: மாநகராட்சிக்கு ரூ.35 கோடி ஒதுக்க வேண்டும்
மதுரை, ஏப். 16: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விஷயத்தில் மாநகராட்சிக்கு ரூ.35 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேலுக்கு தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இச்சங்கத்தின் கௌரவச் செயலர் பி.சுபாஷ்சந்திரபோஸ் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
மதுரை விமான நிலையத்தை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் திட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது பாரட்டுக்குரியது. முதற்கட்டமாக ரூ.130 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. விமான ஓடுதளப் பாதையை 12,500 அடியாக விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கான நில ஆர்ஜிதம் மற்றும் ஒப்படைப்பு பணிகள் மட்டும் இன்னும் முழுமையடையாமல் உள்ளன.
விமான நிலைய விரிவாக்கத்துக்கான பகுதியில் மதுரை ரிங்ரோடு குறுக்கிடுவதால், அதை ஆறரை கிலோமீட்டர் தொலைவுக்கு மாற்றி அமைப்பதற்கான வல்லுநர் குழுவினரின் ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ளன.
ரிங் ரோடு பகுதியில் ஆறரை கிலோமீட்டர் தூரம் மாற்றியமைப்பதற்கான உத்தேச மதிப்பீட்டுத் தொகையான ரூ.35 கோடியை உடனடியாக மதுரை மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்து விமான நிலைய விரிவாக்கப் பணிகள் காலதாமதமின்றி நிறைவேற துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புதிய டெர்மினல் பணிகள் முடிவடைந்தவுடன், கலால் மற்றும் குடியேற்றப் பிரிவு அலுவலகங்கள் உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிங்கப்பூர், மலேசியா, துபாய், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு மதுரையிலிருந்து விமானங்கள் இயக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மதுரை} புதுதில்லி நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். இதன் மூலம் தென்னிந்தியாவின் தொழில் வளம் சிறப்படைவதற்கும், சுற்றுலாத் துறை மேன்மையடையவும் வழிவகுக்கும்.