மாநகராட்சியில் தீப்பிடித்த அலுவலகம் சீரமைப்பு
ஈரோடு: தீப்பிடித்த மாநகராட்சி அலுவலகத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தீ விபத்துக்கு பின், 'எக்ஸாஸ்டர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சென்ற 14ம் தேதி அதிகாலை 1 மணிக்கு மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. வரி செலுத்தும் அலுவலகத்தில் நடந்த இந்த தீவிபத்தில், 32 மின்விசிறிகள், தெர்மகோல் ஷீட்டால் வேயப்பட்ட மேற்கூரை (சீலிங்), ஒரு டேபிள், இரண்டு சேர், சில ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.
அறைமுழுவதும் புகையடித்ததில் கறுப்பு நிறத்தில் மாறியது. எம்.சி.பி., போர்டு சரியான நேரத்தில் துண்டித்ததால், அருகிலிருந்த வாக்காளர் பட்டியல் அலுவலகத்துக்கு மின்சாரம் செல்லவில்லை. இதனால், பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது. சித்திரை முதல் நாள் நடந்த தீவிபத்தை அபசகுணமாக மாநகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் கருதுகின்றனர். தீ விபத்துக்கு பின் மாநகராட்சி வரி செலுத்தும் அலுவலகம் சீரமைக்கும் பணி நடப்பதால் சரி வர செயல்படுவதில்லை. மேல் தளத்திலும், கீழ் தளத்திலும் ஆவணங்கள், கோப்புகள், இருக்கைகள், கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி அலுவலகத்தில் சீரமைக்கும் பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது. தெர்மகோல் ஷீட்டால் வேயப்பட்ட மேற்கூரை பிரிக்கப்பட்டு, டிஸ்டம்பர் அடித்து வருகின்றனர். தீ விபத்தின் போது, போதிய காற்றோட்ட வசதி (வெண்டிலேஷன்) இல்லாததால்தான் புகை வெளியே செல்ல முடியாமல் கம்ப்யூட்டர், டேபிள், சேர், சுவர் முழுவதும் புகை பரவி கறுப்படித்தது. போதிய காற்றோட்ட வசதியிருந்திருந்தால் புகை உள்ளே பரவியிருக்காது. தீ விபத்துக்கு பின் மாநகராட்சி அலுவலகத்தில் 'எக்ஸாஸ்டர்' பொருத்துவதற்காக சுவரில் ஐந்து இடங்களில் துளை போட்டுள்ளனர். கட்டிடம் கட்டும்போதே திட்டமிடாதது ஏனோ?