தினமலர் 26.04.2010
மதுரையில் 400 நவீன நிழற்குடைகள் வருவாயை பெருக்க மாநகராட்சி திட்டம்
மதுரை: நகர எல்லைக்குள் உள்ள 400 பஸ் நிழற்குடைகளை நவீனப்படுத்தி, வருவாயை பெருக்க மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மதுரையில் 400 நிழற்குடைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை, சேதம் அடைந்து, கூரை பெயர்ந்து காணப்படுகின்றன. சில நிழற்குடைகளில் சில நிறுவனங்கள் இஷ்டம்போல் விளம்பர பலகைகள் வைத்துள்ளன. இவை சரியாக கண்காணிக்கப்படுவதில்லை. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இதற்கிடையில் மதுரையில் 720 கி.மீ., நீளமுள்ள சாலைகள், விரைவில் உலகத்தரத்திற்கு மாற்றப்பட உள்ளன. அப்படி மாறும்பட்சத்தில் நிழற்குடைகளும் நவீனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது.இதையடுத்து, நிழற்குடைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது. தற்போது மதுரையில் திறக்கப்பட்டு உள்ள நவீன இலவச கழிப்பறைகளைப் போல, தனியார் நிறுவனங்களிடம் நிழற்குடைகள் ஒப்படைக்கப்படும். மாநகராட்சி கூறும் வரைபடத்தின்படி, நிறுவனங்களே இவற்றை கட்டி, பராமரித்துக் கொள்ள வேண்டும். இதற்கு மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாயை, கட்டணமாக மாநகராட்சிக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.