Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தச்சநல்லூரில் ரூ. 25 கோடியில் மேம்பாலம்: டிசம்பரில் பணி தொடக்கம்

Print PDF

தினமணி 30.04.2010

தச்சநல்லூரில் ரூ. 25 கோடியில் மேம்பாலம்: டிசம்பரில் பணி தொடக்கம்

திருநெல்வேலி,ஏப்.29: திருநெல்வேலி, தச்சநல்லூரில் ரூ. 25 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. மாநகராட்சியும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இப் பிரச்னைக்குத் தீர்வு கிட்டவில்லை.

வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் ரவுண்டானாவில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல குலவணிகர்புரம் ரயில்வே கேட்டிலும் ரூ. 25 கோடியில் புதிய மேம்பாலம் அமைப்பதற்குரிய பணிகள் ஜூனில் தொடங்குகிறது.

இப் பகுதிகளுக்கு அடுத்தப்படியாக மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுவது தச்சநல்லூர் ரயில்வே கேட் பகுதியாகும். இந்த ரயில்வே கேட் ஒரு நாளைக்கு சுமார் 35 முறை மூடப்பட்டு, திறக்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுவும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் உள்ளது.

இதனால், அப் பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் விளைவாக மாநில நெடுஞ்சாலைத்துறை, தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு திட்டத்தை தயார் செய்துள்ளனர். அத் திட்டத்தில் மேம்பாலம் அமைக்க தோராயமாக ரூ. 25 கோடி வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கை சில மாதங்களுக்கு முன், தெற்கு ரயில்வே அனுமதிக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை அனுப்பி வைத்திருந்தது.

தற்போது அதற்கு தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அரசிடமிருந்து அரசாணை பெறுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசாணை மே மாதம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாணை கிடைத்ததும், பாலத்துக்கான முழுமையான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தம் கோரப்படும். இதைத் தொடர்ந்து டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் பாலத்தின் பணிகள் முறைப்படி தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு ரயில்வே தமிழகத்தில் உள்ள ரயில்வே கேட்டுகளை ஆளில்லாமல் பராமரிப்பதற்கும், ரயில்வே கேட் மூலம் ஏற்படும் செலவை குறைக்கவும் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், தச்சநல்லூரில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்துக்கான நிதியை மாநில நெடுஞ்சாலைத்துறையும், தெற்கு ரயில்வேயும் வழங்குகின்றன.

பாலம் கட்டுமானப் பணிகள், தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும். இப் பாலத்தால் தச்சநல்லூரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.