தினமணி 03.05.2010
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முதலீடு
புதுச்சேரி, மே 2: உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முதலீடு செய்யப்படும் என்று மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி கூறினார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி அளித்த பதில்:
10-வது ஐந்தாண்டு திட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.08 சதவீதத்தில் இருந்தது. தற்போது 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 7.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய திட்டக்குழுவின் ஆரம்ப மதிப்பீட்டின்படி 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் மின்சக்தித் துறையில் உத்தேசிக்கப்பட்ட முதலீடு இலக்கு ரூ.1,83,507 கோடிக்கு மாறாக முதல் 2 ஆண்டுகளில் ரூ.2,28,227 கோடியும் அதே போல சாலைகள் மற்றும் பாலங்களுக்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் முதலீடு இலக்கு ரூ.1,06,611 கோடிக்குப் பதிலாக முதல் 2 ஆண்டுகளில் ரூ.90,849 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும் துறைகளுக்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் முதலீடு இலக்கு ரூ.27,231 கோடிக்குப் பதிலாக முதல் 2 ஆண்டுகளில் ரூ.12,090 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் மின்சாரம்,சாலைகள், பாலங்கள் மற்றும் துறைகளுக்காக முறையே ரூ.6,58,630 கோடி, ரூ.2,78,658 கோடி மற்றும் ரூ.40,647 கோடி திருத்தி அமைக்கப்பட்ட முன்திட்ட முதலீடு ஆகும்.
11-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இந்த முதலீடு ரூ.20,54,205 கோடி ஆக திருத்தப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு, தனியார், பொதுநிறுவனம் மற்றும் தன்னார்வதொண்டு நிறுவனங்களிடையே கூட்டுறவை வலிமையுள்ளதாகவும், தனியார் பங்களிப்பின் மூலம் 30 சதம் நிதி கட்டமைப்புக்கு ஒதுக்கப்படலாம் என்று 11-வது ஐந்தாண்டு திட்டம் மதிப்பீடு செய்துள்ளது. ஜவாஹர்லால் நேரு நகர வளர்ச்சித் திட்டம் மூலம் 2001 மக்கள் தொகை கணக்குப்படி 10 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்