தினகரன் 22.11.2013
அரசு மருத்துவமனை செல்ல ரூ.70லட்சத்தில் நடை மேம்பாலம்
கோவை, : கோவையில் அரசுமருத்துவமனை உள்ளிட்ட இரண்டு இடங்களில் ‘ஸ்கைவாக்‘ மேம்பாலம் அமைக்க மேயர் அடிக்கல் நாட்டினார்.
கோவை மாநகரில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும், சாலையை கடக்க மக்கள் சிரமப்படும் பகுதியிலும் ‘ஸ்கைவாக்‘ என்னும் நடைமேம்பாலம் அமைக்க மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை முன்புறம், சிங்காநல்லூர் காவல்நிலையம் முன்புறம், ரயில்நிலையம் முன்புறம், மேட்டுப்பாளையம் ரோடு அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் முன்புறம், மேட்டுப்பாளையம் ரோடு-சிவானந்தாகாலனி ஆகிய ஐந்து இடங்களில் இந்த நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக, கோவை அரசு மருத்துவமனை முன்புறம், சிங்காநல்லூர் காவல்நிலையம் முன்புறம் ஆகிய இரு இடங்களிலும் இந்த ‘ஸ்கைவாக்‘ மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, தலா ரூ.70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கமிஷனர் லதா தலைமை தாங்கினார். மேயர் செ.ம.வேலுசாமி அடிக்கல் நாட்டினார். இப்பாலம், தரையில் இருந்து 6 மீட்டர் உயரத்திலும், 31 மீட்டர் நீளத்திலும் அமைகிறது. மேலே மக்கள் நடந்து செல்ல ஐந்து அடி அகலம் இடைவெளி விடப்படுகிறது. சாலையின் ஒருபுறம் பாலம் துவங்கும் இடம், மறுபுறம் பாலம் முடிவடையும் இடம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் கான்கிரீட் பில்லர்கள் அமைக்கப்படுகிறது. மீதமுள்ளவை அனைத்தும் இரும்பு கிரில்களால் அமைக்கப்படுகிறது.