Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

அரசு மருத்துவமனையில் "அம்மா' உணவகம் ரூ.9.8 லட்சத்தில் புதிய கட்டடத்திற்கு ஒப்பந்தம்

Print PDF
தினமலர்             04.06.2013

அரசு மருத்துவமனையில் "அம்மா' உணவகம் ரூ.9.8 லட்சத்தில் புதிய கட்டடத்திற்கு ஒப்பந்தம்


சென்னை:சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாநகராட்சி புதிதாக துவங்கப்பட உள்ள மலிவு விலை உணவகத்திற்கு, 9.8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஸ்டான்லி ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளிலும் மலிவு விலை உணவகம் துவங்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த மாத இறுதிக்குள் உணவகத்தை துவக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

விரைவில் துவக்கம்

இதற்காக அந்த மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கும் கட்டடத்திற்கு அருகே 5,000 ச.அடி பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், பழைய சென்ட்ரல் ஜெயில் அமைந்து உள்ள சாலையில், கூவம் ஆற்றை கடக்கும் மேம்பாலத்தின் கீழ் பகுதியாகும். உணவகம் அமைய உள்ள இடத்தில் மேல்பகுதியில் தளம் இருப்பதால், பக்கவாட்டு சுவர் மட்டுமே கட்டப்பட வேண்டும்.

இதற்காக மாநகராட்சி 9.8 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கோரி உள்ளது. கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.

மறு பரிசீலனை

இதற்கிடையில், அரசு பொது மருத்துவமனையில், உணவகம் அமைய உள்ள இடத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, துறைமுகம் தொகுதி, அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:

அரசு பொது மருத்துவமனையில், உணவகம் அமைக்க, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம், பொதுமக்களின் கழிப்பறையாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இடத்திற்கு இருபுறமும், கட்டண கழிப்பறைகள் உள்ளன. பின்புறம், உணவு கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு அசுத்தமாக உள்ளது.

எனவே, அசுத்தமான இடத்தில் உணவகம் அமைப்பதற்கு பதிலாக, தற்போது மருத்துவமனை வளாகத்தில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில், 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும், "கேன்டீன்' உள்ள இடத்தில், உணவகத்தை அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
 

திருத்தங்கலில் ரூ.29 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறப்பு

Print PDF
தினமணி        03.06.2013

திருத்தங்கலில் ரூ.29 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறப்பு


சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் திருத்தங்கல் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை சனிக்கிழமை செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

 திருத்தங்கல் அண்ணாகாலனி, இந்திராநகர், பாண்டியன்நகர் ஆகிய பகுதிகளில் தலா ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் சுகாதார வளாகங்களையும், பெரியார் காலனியில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் சுகாதார வளாகத்தையும், முருகன் காலனியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் மேல்நிலைத் தொட்டியையும் அமைச்சர் திறந்து வைத்து பேசியதாவது:

 மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது சுகாதார வளாகங்கள், மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்காக பல நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டு முதல்வர் உத்தரவின்பேரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் எஸ்.ஜி.ரெங்கன், நகர்மன்றத் தலைவர் தனலட்சுமி கணேசமூர்த்தி, துணைத்தலைவர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர்கள் கருப்பசாமி, சிவகுமார், ஆணையாளர் (பொறுப்பு) முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

அரக்கோணம் நகரில் விரைவில் நவீன எரிவாயு தகனமேடை திறப்பு'

Print PDF
தினமணி       31.05.2013

அரக்கோணம் நகரில் விரைவில் நவீன எரிவாயு தகனமேடை திறப்பு'


அரக்கோணத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் நவீன எரிவாயு தகனமேடை விரைவில் திறக்கப்படும் என நகர்மன்றத் தலைவர்(பொறுப்பு) கே.ராஜா தெரிவித்தார்.

அரக்கோணம் நகரில் ரூ.60 லட்சத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. முன்பு கொண்டு வரப்பட்ட புகைப்போக்கி சரியில்லாததால், அது நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், புதியதாக 100 அடி உயர புகைப்போக்கி அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பணியை கே.ராஜா, நகராட்சி பொறியாளர் ராஜவிஜயகாமராஜ், உதவி பொறியாளர் ஜெயபால், நகர்மன்ற உறுப்பினர் பார்த்தசாரதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கே.ராஜா தெரிவிக்கையில், புகைபோக்கி அமைக்கப்பட்டுவிட்டது.

இதையடுத்து, எரிவாயு விநியோகக் குழாய்கள் மற்றும் தகனமேடை இணைப்பு பணிகள் முடிவடைந்ததும் கட்டட இறுதிகட்ட பணிகளுக்கு பிறகு திறப்பு விழா விரைவில் நடைபெறும் என்றார்.
 


Page 62 of 238