தமிழ் முரசு 22.04.2013
மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்க நவீன இயந்திரம் மாநகராட்சி 4 கோடி ஒதுக்கீடு
சென்னை:மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரிக் கும் நவீன இயந்திரம்
நிறுவ ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.சென்னை மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் இன்று நடந்தது.
இதில் மொத்தம் 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானம்
வருமாறு:
சென்னை மாநகராட்சியில் 200 மலிவு விலை உணவகம்
திறக்கப்பட்டுள்ளது. காலையில் இட்லி, சாம்பார், மதியம் சாம்பார் சாதம்,
தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் மாலையில் சப்பாத்தி,
பருப்பு கடைசல் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு உணவகத்திலும் 2 ஆயிரம்
சப்பாத்தி, பருப்பு கடைசல் என 200 மலிவு விலை உணவகங்களில் 4 லட்சம்
சப்பாத்திகள், பருப்பு கடைசல் தயார் செய்து விற்பனை செய்யப்படும்.
6
பேர் கொண்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 50
சப்பாத்தி மட்டுமே தயாரிக்க முடியும். நவீன இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு
மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்தி தயாரிக்க முடியும். இதன் மூலம் ஆள்
தேவையும், நேரமும் குறையும். நவீன இயந்திரம் நிறுவுவதற்கு குறைந்த பட்சம் 3
மாத அவகாசம் தேவைப்படும். சப்பாத்தி தயாரிக்க தேவையான இயந்திரம் கொள்முதல்
செய்ய ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்படும்.
மற்ற மாநகராட்சிகளிலும் மலிவு
விலை உணவகம் தொடங்குவதற்கும் இந்த உணவகங்களில் கூடுதலாக பொங்கல்,
எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவற்றை ரூ.5&க்கும், இரண்டு
சப்பாத்தி, பருப்பு கடைசல் அல்லது குருமா 3 ரூபாய்க்கும் வழங்கப்படும்
என்று அறிவித்ததற்கும் முதல்வருக்கு நன்றி. பான்பராக், குட்கா மசாலா போன்ற
போதைப் பொருட்களை தமிழகத்தில் விற்பதற்கு தடை விதித்த முதல்வருக்கு நன்றி
என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக கவுன்சிலருக்கு
மேயர் எச்சரிக்கை
கேள்வி நேரத்தின்போது, அதிமுக கவுன்சிலர் கஸ்தூரி
அடிக்கடி ‘வாழ்க.. வாழ்க’ என்று கூறிக் கொண்டே இருந்தார். திமுக
உறுப்பினர்கள் பேசும்போதும் கஸ்தூரி குறுக்கிட்டு பேசினார். இதனால்
கோபமடைந்த மேயர் சைதை துரைசாமி, ‘நானோ, மற்ற கவுன்சிலர்களோ பேசும்போது
இடையே பேசக் கூடாது. அப்படி பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என
எச்சரிக்கை விடுத்தார்.