கூடலூர் பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிக்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகை ரூ.20 லட்சம் கலெக்டர் கருணாகரனிடம் வழங்கப்பட்டது
கூடலூர் பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளுக்கான பொதுமக்களின் பங்களிப்பு தொகை ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
வளர்ச்சிப் பணிகள்
கோவை பெரியநாயக்கன்பாளையத்திற்கு அருகில் உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் தன்னிறைவுத் திட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு பொதுமக்கள் சார்பில் பணம் வழங்கப்படுகிறது.பேரூராட்சியில் உள்ள சாமிசெட்டிபாளையத்திலிருந்து காமராஜ்நகர் செல்லும் வழியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பாலமும், பீக்காக் கார்டனில் ரூ.6 லட்சம் செலவில் தார்சாலையும் அமைக்கப்படுகின்றன.
பங்களிப்பு தொகை ரூ.20 லட்சம்
இதற்காக பேரூராட்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், பாலு, பேராசிரியர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் குழு அமைத்து பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ. 20 லட்சம் பெற்றனர். இதைதொடர்ந்து பேரூராட்சிகள் துணை இயக்குநர் திருஞானம் முன்னிலையில் பேரூராட்சித்தலைவர் அ.அறிவரசு, துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் பொதுமக்கள் சார்பில் ரூ.20 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டரிடம் கருணாகரனிடம் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சிவசாமி, முன்னாள் தலைவர் பாப்பண்ணன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், முருகானந்தம், யு.ஐ.டி. கல்லூரி தாளாளர் சண்முகம் மற்றும் குடியிருப்பு நலமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.