தினமணி 07.12.2010
பாதாளச் சாக்கடைக்குள் திடப்பொருட்கள் கலக்கக் கூடாது
திருப்பூர், டிச. 6: அடைப்பை ஏற்படுத்தும் வகையிலான திடப்பொருட்களை பாதாளச் சாக்கடைக்குள் கலப்பதைத் தடுக்க மக்கள் கழிவுநீர்க் குழாயில் சேம்பர்கள் அமைக்க வேண்டும் என்று, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி விடுத்துள்ள அறிக்கை:
உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பாதாளச் சாக்கடை, மலக்கழிவுத் தொட்டி உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணிக்கு தொழிலாளர்களைப் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது. பாதாளச் சாக்கடை, மலக்கழிவுத் தொட்டி உள்ளிட்டவற்றிலிருந்து அபாயகரமான நச்சு வாயு வெளியேறும் என்பதால், மக்கள் அப்பணிக்கு ஜெட்ராடிங் இயந்திரம், டி சில்டிங் இயந்திரம், மொபைல் மெக்கானிக்கல் பம்ப்ஸ் உள்ளிட்ட இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.
தவிர, பாதாளச் சாக்கடையில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்ள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், மாட்டுத் தொழுவங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து திடப்பொருட்களை பாதாள சாக்கடைக்குள் போடக் கூடாது.
கழிவுநீர்க் குழாய்களில் தடுப்புகள் அமைத்து திடப்பொருட்களை பாதாள சாக்கடைக்குள் கலக்க விடாமல் தடுக்க வேண்டும். தவிர, வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால்களுடன் இணைக்கக் கூடாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.