தினகரன் 10.09.2010
நகராட்சி புதிய மருத்துவமனை ஜனவரி மாதம் திறக்கப்படும் நகர்மன்ற தலைவர் தகவல்
திண்டுக்கல், நவ. 10: திண்டுக்கல் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் நடராஜன் கூறினார்.
திண்டுக்கல் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். நகரமைப்பு அலுவலர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். நகர்நல அலுவலர் வரதராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குடிநீர், கழிவுநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட நகர்மன்றத்தலைவர் நடராஜன் கூறியதாவது:
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கம், ஸ்கேன் சென்டர் மற்றும் அதிநவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்டு வரும் கமலாநேரு மகப்பேறு மருத்துவமனை கட்டிடப்பணி முடியும்தருவாயில் உள்ளது. இப்பணி முடிந்ததும் ஜனவரி முதல் வாரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இதை திறந்து வைக்கிறார். கலெக்டரின் உத்தரவின்பேரில் நகரில் சுற்றிதிரியும் பன்றிகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.