தினமணி 02.11.2010
நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுமா?
விருதுநகர், நவ . 1: விருதுநகரில் பொதுமயானத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் நான்கு வழிச்சாலையை ஒட்டி பொதுமயானம் உள்ளது. இங்கு பிணங்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ரூ. 50 லட்சம் செலவில் பொதுமயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணி கடந்த நான்கு ஆண்டுகளாக முடிவடையாமல் உள்ளது. மேலும் கட்டப்பட்டுள்ள கட்டடப் பகுதிகளும் பெயர்ந்தும், கண்ணாடிகள் உடைந்தும் காணப்படுகின்றன.
மயானத்தில் சுற்றுச் சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சுற்றுப்பகுதிகளில் உள்ளவர்களும் இந்த இடத்தை பொதுக்கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் இடமாகவும் மாறி வருகிறது.
இது குறித்து நகராட்சித் தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ் கூறுகையில், தமிழகம் முழுவதும் மயானத்தின் அனைத்து வேலைகளை ஒரே ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை விரைவில் முடிக்குமாறு ஒப்பந்ததாரரை நகராட்சி வலியுறுத்தி உள்ளது என்றார்.