தினமலர் 22.10.2010
கோடம்பாக்கம் மேம்பாலம் பலப்படுத்தும் பணி துவக்கம்
சென்னை : கோடம்பாக்கம் மேம்பாலம் நான்கு கோடியே 74 லட்ச ரூபாய் செலவில், பலப்படுத்தி அழகுபடுத்தும் பணி, நேற்று மேற்கொள்ளப்பட்டது.நகரில் உள்ள பழைய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகளை பலப்படுத்தி அழகுபடுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.திரு.வி.க., பாலம், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, சென்ட்ரல் ஸ்டான்லி மேம்பாலம் போன்ற பல மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதுபோல், 1965ம் ஆண்டு கட்டப்பட்ட கோடம்பாக்கம் மேம்பாலம் நான்கு கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பில், பலப்படுத்தி அழகுபடுத்தும் பணி நேற்று தொடங்கியது.பணியை தொடங்கி வைத்து மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:கடந்த 45 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோடம்பாக்கம் மேம்பாலத்தில் தூண்கள், சுவர்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இந்த பாலத்தை வலிமைப்படுத்தி, அழகுபடுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேம்பாலம் அழகுபடுத்தும் பணி 12 மாதங்களில் முடிக்கப்படும்.மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் கலைநயம் மிக்க அழகிய ஓவியங்கள் வரையப்படும். சென்னையில், கடந்த நான்கு ஆண்டுகளில், ஆறு மேம்பாலங்கள், ஒரு சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.மேலும், 10 இடங்களில் சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் கட்டும் பணி நடக்கிறது.அத்துடன் பழைய மேம்பாலங்களையும், சுரங்கப் பாதைகளையும் பலப்படுத்தி அழகுபடுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன் துணை கமிஷனர் (பணிகள்) தரேஷ் அகமது, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.