தினமணி 19.10.2010
குற்றாலத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்காக்கள் நாளை திறப்பு
தென்காசி, அக். 18: குற்றாலத்தில் ரூ. 65 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்காங்கள், சுற்றுலா வரவேற்பு மையம் ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை (அக். 20) நடைபெறுகிறது. குற்றாலத்தில், மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 13.74 லட்சம் செலவில் பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகம் மற்றும் ஐந்தருவி செல்லும் பாதையில் சுற்றுலா வரவேற்பு மையம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. வைரம்ஸ் நகர் பகுதியில் ரூ. 7.05 லட்சம் செலவில் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. புலியருவி பகுதியில் ரூ. 11.50 லட்சம் செலவில் நவீன கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ. 14.43 லட்சத்தில் சிறுவர் பூங்காவும், ரூ 18.35 லட்சத்தில் விஸ்வநாதராவ் பூங்காவும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் பணிகள் முடிவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதன்கிழமை (அக். 20) முதல் செயல்படவுள்ளன. அன்றைய தினம் மாலையில் நடைபெறும் விழாவில், தென்காசி எம்எல்ஏ வீ. கருப்பசாமிபாண்டியன், மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் ஆகியோர் திறந்துவைக்கின்றனர். விழா ஏற்பாடுகளை, பேரூராட்சி மன்றத் தலைவர் இரா. ரேவதி, துணைத் தலைவர் பா. ராமையா, பேரூராட்சி செயல் அலுவலர் கொ. ராஜையா மற்றும் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.