தினகரன் 08.10.2010
ரூ23 கோடியில் உருவாகிறது ரங்கராஜபுரம் மேம்பாலம் ஜனவரியில் திறப்பு
சென்னை, ஆக.8: ரங்கராஜபுரம் மேம்பாலம் ஜனவரியில் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரங்கராஜபுரத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதை ரயில்வே மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மேயர் கூறியதாவது:
முதல்வர் கருணாநிதி அறிவுரைப்படி, மாநகராட்சி சார்பில் 6 இடங்களில் மேம்பாலமும், ஒரு சுரங்கப்பாதையும் ரூ^134.87கோடி செலவில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 இடங்களில் மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரங்கராஜபுரத்தில் ரயில் பாதையின் குறுக்கே ரூ23.76 கோடி செலவில் மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது.
இந்த மேம்பாலம் தி.நகர் பசுல்லா சாலை பக்கம் 264.54 மீட்டரும், ரங்கராஜபுரம் பக்கத்தில் 303.4 மீட்டரும், கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் 297 மீட்டரும், ரயில்பாதையின் குறுக்கே 97.9 மீட்டரும் என மொத்தம் 962.84 மீட்டர் நீளத்திற்கும் 8.5 மீட்டர் மற்றும் 6.5 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த மேம்பாலம் ‘ஒய்’ வடிவமைப்பில் கட்டப்படுகிறது.
இது இரு வழி போக்குவரத்தாக இருக்கும். ரயில்பாதையின் குறுக்கே கட்டப்படும் தளம் 1500 டன் எடையை தாங்கும் வகையில் நவீன முறையில் அமைக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இந்த மேம்பாலத்தின் மூலம் தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு மேயர் கூறினார். ரங்கராஜபுரம் மேம்பால பணியை மேயர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்கிறார்.