Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நகராட்சி அலுவலக புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வருமா?

Print PDF

தினமணி 20.09.2010

நகராட்சி அலுவலக புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வருமா?

தேனி, செப். 19: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ரூ 60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகப் புதிய கட்டடம், திறப்புவிழா காணப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் உள்ளது.

பெரியகுளத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கட்டடத்தில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது.

நகராட்சி அலுவலகக் கட்டடத்தை ஒட்டிய பகுதியில் நகர்மன்றக் கூட்ட அரங்கு அமைந்துள்ளது. போதிய இடவசதி இல்லாத பழமையான நகராட்சி அலுவலகக் கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் தீர்மானித்து, ரூ 60 செலவில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததால், நகராட்சி அலுவலகம் தாற்காலிகமாக நகர்மன்றக் கூட்ட அரங்கில் செயல்பட்டது.

கட்டுமானப் பணிகள் முழுமையடைந்த நிலையில், நகராட்சி அலுவலக புதியக் கட்டடத்தை கடந்த பிப்ரவரி, 16-ம் தேதி தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்புவிழாவின்போது துணை முதல்வர் மு.. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்நிலையில், திறப்புவிழா காணப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும், இந்தப் புதியக் கட்டடம் தற்போது வரை பயன்பாட்டுக்குத் திறக்காமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், நகராட்சி அலுவலகம் நகர்மன்றக் கூட்ட அரங்கிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக, நகர்மன்றக் கூட்ட அரங்கில் போதிய இடவசதி இல்லாத நிலையில், ஒரே இடத்தில் அனைத்துப் பிரிவுகளும் செயல்பட்டு வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் நேரங்களில் நகராட்சி அலுவலகம் செயல்பட முடிவதில்லை என்றும், நகர்மன்றக் கூட்டத்துக்காக அலுவலக ஆவணங்கள் மற்றும் இருக்கைகளை ஒதுக்கிவைப்பதற்கு சிரமப்பட வேண்டியுள்ளதாகவும் பணியாளர்கள் கூறுகின்றனர். நகராட்சி அலுவலகப் புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நகராட்சி அலுவலகக் கட்டடத்தில் பதிக்கப்படும் அடிக்கல்லில், அரசியல் கட்சியினரின் பெயர்களைப் பொறிப்பதில் நகர்மன்ற நிர்வாகப் பொறுப்பில் உள்ள அதிமுக, திமுக கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால், புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் சீதாலட்சுமி கூறுகையில், புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்குத் திறப்பதில் எவ்விதப் பிரச்னையும் இல்லை. பல ஆண்டுகளுக்கு பின்பு கட்டப்பட்ட புதிய கட்டடம் என்பதால் நாள், நேரம் பார்த்து பயன்பாட்டிற்குத் திறக்கலாம் என்று கருதுகிறோம். நகராட்சி அலுவலகக் கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றார்.

 

விருதுநகரில் 2008ல் முடிய வேண்டிய பாதாள சாக்கடை பணி எப்போது முடியும்?

Print PDF

தினமலர் 20.09.2010

விருதுநகரில் 2008ல் முடிய வேண்டிய பாதாள சாக்கடை பணி எப்போது முடியும்?

விருதுநகர் : செயல்படுத்தினால் பயன் இருக்காது என கூறப்பட்டும், "இலக்கு' நிர்ணயித்து விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி மூன்று ஆண்டுகளாகியும் முடிந்தபாடில்லை. கோடிகளை முழுங்கியுள்ள இத்திட்டம் இன்னும் சில கோடிகளை விழுங்க உள்ள நிலையில் சுமாராக இருந்த ரோடுகள் அலங்கோலப்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்தை இடியாப்ப சிக்கலாக மாற்றிவிட்டது தான் திட்டம் கண்ட பலனாக உள்ளது. விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் கலை கண்ட விருதுநகரில், வீடுகள் முன் வாறுகாலில் மனிதகழிவுகள் முதல் அனைத்து கழிவுகளும் மிதக்கும். இதனால் 20 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் இங்கு செயல்படுத்த ஆய்வு நடத்தப்பட்டது. இத்திட்டம் விருதுநகருக்கு சரிபட்டு வராது என முடிவு தெரிந்து திட்டம் கைவிடப்பட்டது.

நகராட்சி கவுன்சிலுக்கு 2006 தேர்தலில், "தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திட்டம் பயனளிக்கும்' என கூறினர். 2007 ஜனவரியில் 23.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் துவக்கப்பட்டது. 88.73 கி.மீ., தூரத்திற்கு குழாய் பதிப்பு, 15,820 வீடுகளுக்கு குழாய் இணைப்பு என பிரமாண்டமாக கூறப்பட்ட இத்திட்டம் 2008 ஜூனில் முடிந்துவிடும், கழிவுகள் பூமிக்கு அடியில் ஓடி, குப்பை கிடங்கு அருகே அமைக்கப்படும் நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விருதுநகரை தாண்டி கடத்தி விடப்படும் என்றார்கள். 2010 ஜூனும் வந்து போய்விட்டது. திட்டம் தான் இன்னமும் முடிந்தபாடில்லை.பல இடங்களில் சுமாராக இருந்த ரோடுகள் கூட, பாதாளசாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டி அதன் மீது மண், கற்களோடு சேர்த்து மூடியிருப்பதால் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. வாகன போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

இந்நிலையில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் சுத்தம் செய்து ஊரை தாண்டி கழிவுநீர் கடத்திவிடப்படும் என நகராட்சியினர் கூறினர். ஆனால், அது அமைக்கப்படாமலேயே வீடுகளுக்கு இணைப்பு கொடுத்து 29 லட்சம் வரை மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கவுசிகா நதியில் விடப்படுகிறது என நகர் நல அமைப்பினர் போட்ட புகார் குண்டு வெடிக்க துவங்கிவிட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பினர் கூறியதாவது: திட்டப்படி எதுவும் நடக்கவில்லை. திட்டம் முடிந்த பின் தான் நகரில் ரோடு போடப்படும் என்றார்கள். ஆனால், நகராட்சி வி..பி., உள்ள அல்லம்பட்டி, அமைச்சர் வசிக்கும் பகுதியான ராமமூர்த்தி ரோட்டில் பளபளக்கும் ரோடு போடப்பட்டுள்ளது. நாங்கள் கொடுத்த புகாரால் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணியை மத்திய மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ய வர உள்ளனர். இதனால் நகரில் சில பகுதிகளில் ரோடு போடப்பட்டுள்ளது, என்றனர்.

இதுகுறித்து நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "நிதி மற்றும் வெளியிட இயலாத சில காரணங்களால் திட்டம் தாமதமாகி வருகிறது. இருப்பினும் விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்ட வரப்படும். விதிப்படி தான் பணிகள் செய்யப்படுகிறது,' என்றனர். ஆனால், இப்போதும் வீடுகள் முன் மனித கழிவுகள் உட்பட அனைத்து கழிவுகள் தேங்கிதான் உள்ளன.

 

மகப்பேறு மருத்துவமனைக்கு நவீன உபகரணங்கள்

Print PDF

தினமணி 16.09.2010

மகப்பேறு மருத்துவமனைக்கு நவீன உபகரணங்கள்

மதுரை, செப்.15: மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திரவியம் தாயுமானவர் பிள்ளை மகப்பேறு மருத்துவ மையத்துக்கு எம்.எல்.. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 11 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சியில் மொத்தம் 13 மகப்பேறு மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் வசதி சில மையங்களில் மட்டுமே உள்ளன.

இந்நிலையில், கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட திரவியம் தாயுமானவர் பிள்ளை மகப்பேறு மருத்துவ மையத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், செல் சென்டர், பயோ கெமிஸ்டிரி அனலைசர் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள் ரூ 11 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கர்ப்பிணிகளுக்கு கருவில் வளரும் குழந்தையின் தன்மை, வளர்ச்சி குறித்தும், செல் சென்டர் மூலம் ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் நிலைமை, ஹீமோகுளோபின் அளவு குறித்தும் அறியலாம். பயோ கெமிஸ்டிரி அனலைசர் மூலம் ரத்த அழுத்தம், யூரியா, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்.

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட மகப்பேறு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் பரிசோதனை செய்துகொள்கின்றனர். இதில், 70 சதம் பேர் ஸ்கேன் எடுக்கின்றனர். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தனியார் மையத்தில் எடுத்தால் குறைந்தது ரூ500 வரை செலவாகும். ஆனால் மாநகராட்சியில் இலவசமாக எடுக்கப்படுகிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பெரிதும் பயன்பெறுவர்.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், எம்.எல்.. நன்மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 11 லட்சத்துக்கான உபகரணங்கள் இந்த மையத்துக்கு வாங்கப்பட்டுள்ளன. நவீன உபகரணங்கள் வைப்பதற்காக சம்பந்தப்பட்ட அந்த மகப்பேறு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கமிஷனர் செபாஸ்டின் அறிவிப்பார் என்றார்.

 


Page 140 of 238