தினகரன் 20.07.2010
செங்கல்பட்டு நகராட்சி அவலம் வீணாய் கிடக்கும் குடிநீர் லாரிகள்
செங்கல்பட்டு, ஜூலை 20: செங்கல்பட்டு நகராட்சியின் மலைமேட்டு பகுதிகளான அனுமந்தபுத்தேரி, ராமர்பாளையம் ஆகிய இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதிகளுக்கு லாரிகள் மூலமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 30வது வார்டு விநாயகர் கோயில் தெரு, 21 வது வார்டு ராமர் பாளையம் ஆகிய பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
ஆனால், இதுவரை குடிநீர் நிரப்பவில்லை. மிகப்பிரம்மாண்டமான தொட்டியாக இருப்பதால், சிலர் அதன் மறைவில் இரவு நேரத்தில் மது குடிக்கின்றனர். லாரிகளில் கொண்டு வரப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. நகராட்சி குடிநீர் லாரிகள் பழுதடைந்து கிடக்கின்றன.
இதனால் தனியார் லாரி, டிராக்டரிலும் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. போதுமான அளவுக்கு நகராட்சி குடிநீர் வழங்காததால், மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்குகின்றனர். குடிநீர் தொட்டிகளை சீர்படுத்தி தண்ணீர் நிரப்பி தினமும் சப்ளை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.