தினமணி 01.04.2010
பரமக்குடி நகராட்சிக்கு ரூ. 4 லட்சத்தில் புதிய ஜெனரேட்டர்
பரமக்குடி, மார்ச் 31: பரமக்குடி நகராட்சி அலுவலகத்துக்கு ரூ.4 லட்சத்தில் புதிய ஜெனரேட்டர் வாங்கப்பட்டுள்ளது. இதை நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா முனியசாமி புதன்கிழமை இயக்கி துவக்கிவைத்தார்.
நகராட்சி அலுவலகப் பணிகள் அனைத்தும் கணிணிமயமாக்கப்பட்டுள்ளதால் நகரில் மின்தடை ஏற்படும்போது பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுவந்தன. இதனால் பொதுமக்களின் நலன் கருதியும், பணிகள் அனைத்தும் தடையின்றி தொடர்ந்து நடை பெறும்விதமாகவும் மின்தடைக்கு மாற்று ஏற்பாடாக ரூ. 4 லட்சம் மதிப்பில் ஜெனரேட்டர் வாங்க நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, புதிய ஜெனரேட்டர் வாங்கப்பட்டு, புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். சுகாதார ஆய்வாளர் ரத்தினக்குமார் நன்றி கூறினார்.