தினமணி 10.03.2010
ரூ. 26 லட்சத்தில் கொசு மருந்தடிக்கும் சாதனங்கள் வாங்க மாமன்றம் தீர்மானம்
திருச்சி, மார்ச் 9: திருச்சி மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ரூ. 26.10 லட்சத்தில் கொசு மருந்தடிக்கும் சாதனங்களை வாங்குவது என்று மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் குறித்த அதிருப்தி மக்களிடையே கடுமையாக எழுந்தது. அனைத்துக் கட்சியினரும் இந்த விஷயத்தில் குறை கூறினர். பொதுநல அமைப்
பினர் கோரிக்கைகளை விடுத்துக் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில், தலா ரூ. 17,000 மதிப்பில் 30 சிறிய வகையான புகை மருந்தடிக்கும் இயந்திரங்களும், தலா ரூ. 50,000 மதிப்பில் 30 புகை மருந்தடிக்கும் இயந்திரங்களும், தலா ரூ. 10,000 மதிப்பில் 60 தெளிப்பான்களும் என ரூ. 26.10 லட்சம் மதிப்பில் சாதனங்களை வாங்க மாநகராட்சி முடிவு செய்தது.
இதுதொடர்பாக, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் இயக்குநர் மூலம், முதன்மை பூச்சியியல் வல்லுநரிடம் கருத்து கேட்கப்பட்டது. அவரும் கடந்த மார்ச் 1-ம் தேதி தெளிவுரைகளைக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, கொசு ஒழிப்புப் பணிக்கான சாதனங்களை வாங்குவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
இதற்கான தீர்மானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்றத்தின் அவசரக் கூட்டத்தில் வைக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தில், இதுதொடர்பாக பல்வேறு மாமன்ற உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்துப் பேசினர்.
கொசு ஒழிப்புப் பணியின் அவசர அவசியம் கருதி, இந்தச் சாதனங்களை விரைவில் வாங்குவது என்று மாமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.