தினமலர் 06.05.2010
கோவில்பட்டியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு
கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை பயன்படுத்துவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷ்னர் அறிவித்துள்ளார்.கோவில்பட்டி நகராட்சி கமிஷ்னர் விஜயராகவன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முத்துக்குமார், வெங்கடேஷ் மற்றும் சுகாதார பணியாளர்கள் கோவில்பட்டி நகரப்பகுதியில் அமைந்திருக்கும் ஹோட்டல்கள், கடைகளில் திடீர் ஆய்வுள் மேற்கொண்டனர். இதில் ரயில்வே ஸ்டேசன் ரோடு, மெயின் ரோடு, பசுவந்தனை ரோடு, எட்டயபுரம் ரோடு உட்பட பல பகுதிகளில் நடந்த சோதனையில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள், தேயிலை, கூல்டிரிங்ஸ், கடலைமாவு மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.
ஒருசில கடைகளில் இருந்த காலாவதியான பொருட்களை கைப்பற்றி அழித்தனர். தொடர்ந்து காலாவதியான உணவுப்பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பது குறித்தும், உணவு பொருட்களை முறையாக பயன்படுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கினர். மேலும் ஹோட்டல், கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்படால் பொதுசுகாதாரத்துறை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில்பட்டி நகராட்சி கமிஷ்னர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.