தினமலர் 06.05.2010
மாவட்ட ஓட்டல்களில் சுகாதாரம் குறித்த ரெய்டு இல்லை : லாபம் மட்டுமே குறியால் கலப்படம் அதிகரிப்பு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டல்களில் இதுவரை பெரியளவில் உணவு மற்றும் சுகாதாரம் குறித்த அதிரடி ரெய்டு நடத்தாமல் உள்ளதால், கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்களால் தயாரிக்கும் உணவு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. மதுரையில் நடந்த உயிர்பலி சம்பவம் போல் இங்கும் நடப்பதற்குள் சுகாதாரம் குறித்த அதிரடி ரெய்டு நடத்த வேண்டும்.மதுரையில் ரயில்வே ஸ்டேஷன் எதிரே புதுச்சேரியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் இசைஅமுதன் சுகாதாரமற்ற உணவை சாப்பிட்டதால் ,உடல்நல குறைவு ஏற்பட்டு இறந்தார். இதை தொடர்ந்து மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஓட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
ஓட்டல்கள் தரவரிசையில் பல ரகங்கள் உள்ளன. ஏ, பி , ஸ்டார், சாதாரண ஓட்டல் என தரம் பிரிக்கப்பட்டுள்ளன. தரத்திற்கு ஏற்றாற்போல் ஓட்டல்களில் நுகர்வோர்களுக்கு பல்வேறு வசதிகளை ஓட்டல் நிர்வாகத்தினர் ஏற்படுத்தி தரவேண்டும். மேலும், ஒவ்வொரு ஓட்டல்களிலும் சமையலறை முதல் சப்ளையர் வரை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சப்ளையர்கள் குறிப்பாக தொற்று நோயோ மற்ற நோய்களோ இருக்க கூடாது. இதற்கு மருத்துவ துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பாத்திரங்கள் சுடுதண்ணீரில் கழுவ வேண்டும். கழிப்பறை, பாத்ரூம் இருக்க வேண்டும்.
சமையலறையில் இருந்து புகை வெளியே வரக்கூடாது. கழிவுநீர் தடையின்றி வெளியேற வேண்டும். சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். ரோடுகளில் சமையல் பணி நடக்க கூடாது. இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. பிரியாணி என்ற பெயரில் ஆடுக்கு பதில் மாட்டிறைச்சி போன்றவைகளை கலப்படம் செய்ய கூடாது. சுகாதாரமான முறையில் ஓட்டல்கள் செயல்பட்டு சுகாதாரான உணவுகளை வழங்குகிறார்களா என அவ்வப்போது நகராட்சி மற்றும் சுகாதார துறை ஆய்வாளர்கள் ரெய்டு நடத்த வேண்டும்.
விதிமுறைகள் மீறுபவர்களின் ஓட்டல்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. ஆனால், ராமநாதபுரம் மாவட் டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற ரெய்டு பெரியளவில் நடக்கவில்லை. சுற்றுலா ஸ்தலங்கள் அதிகம் உள்ள மாவட்டத்தில் ஓட்டல்களுக்கு பஞ்சமில்லை. கூட்டம் அதிகமாக வருவதால் ஓட்டல்களில் கலப்படம் முதல் பல்வேறு அத்துமீறல் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதை சுகாதார துறையினர், நகராட்சி நிர்வாகம் என யாருமே கண்டு கொள்வதில்லை.
அவ்வப்போது ஓட்டல்களில் கவனிப்பு உள்ளதால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களின் தரம் மிகவும் தள்ளாடி வருகிறது. ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை போன்ற நகரங்களில் முதற்கட்டமாக அதிரடி ரெய்டு நடத்தினால் பல்வேறு ஓட்டல்களில் அத்துமீறல் வெளிச்சத்திற்கு வரும்.
ராமநாதபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரன் கூறியதாவது: ஓட்டல்களில் ரெய்டு நடத்த சுகாதார துறையினருடன் இணைந்து செல்ல வேண்டும். தற்போது இதுகுறித்த சுற்றறிக்கை வந்துள்ளதாக தெரிகிறது. கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் ஓட்டல்கள் செயல்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார