தினமணி 06.05.2010
சிவகாசி சுகாதார மாவட்டத்தில் மே 12 முதல் உணவகங்களில் சோதனை
சிவகாசி, மே 5: சிவகாசி சுகாதார மாவட்டத்தில் உள்ள சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய வட்டங்களில் உள்ள உணவகங்களில் மே 12-ம் தேதி முதல் சோதனை மேற் கொள்ளப்படும் என சிவகாசி சுகாதார மாவட்ட இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நகராட்சிப் பகுதியில் உணவு ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலர் 5 பேர் அடங்கிய குழுவினர் உணவகங்களில் சோதனை நடத்த உள்ளனர்.
கிராமபுறத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர் சோதனை செய்வார்கள். பேரூராட்சி பகுதிகளில் செயல்அலுவலர் மற்றும் உணவு ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்துவர். இவர்கள் காலாவதியான பொருள்கள் இருந்தால் பறிமுதல் செய்வார்கள்.
உணவு விடுதி மற்றும் மளிகைக் கடை, ஸ்டேஷ்னரி கடைகளிலும் சோதனை நடத்தப்படும். குறைபாடுகள் இருந்தால் பொது சுகாதார சட்டப்படி இயங்க அறிவுரை கூறுவோம்.
உணவங்களில் செயற்கை இலைகளை உபயோகிக்க கூடாது. உணவின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்புவோம். ஏற்கனவே பல டீக்கடைகளில் சோதனை நடத்தியுள்ளோம். அங்கு மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். உணவகங்களில் சமையல் செய்பவர்கள், பரிமாறுபவர்கள் மருத்துவச் சான்று பெற வேண்டும். இலவசமாக பரிசோதனை செய்து சான்று அளிக்கப்படும். சான்றிதழ் இல்லாமல் பணிபுரிவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திறந்த வெளியில் உணவுப் பொருளை வைத்திருக்கக் கூடாது. இதனால் ஈ மொய்த்து பல வியாதிகள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும் இது குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்றார் பாலசுப்பிரமணியன்.