தினமணி 06.05.2010
குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக புகார்
வேலூர், மே 5: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 44-வது வார்டில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புதன்கிழமை புகார் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சி 44-வது வார்டுக்கு உட்பட்டது அப்பாதுரை செட்டித் தெருவில், கழிவு நீர் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி இருக்கிறது.
இதுகுறித்து பல முறை மாநகராட்சி செயற்பொறியாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், சில நேரங்களில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியினருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, கழிவு நீர் வாய்க்கால் செல்லும் பாதையை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என்று புதன்கிழமை வேலூர் மாநகராட்சி மேயர் ப.கார்த்திகேயனைச் சந்தித்து இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.