தினமலர் 12.05.2010
சுகாதார துறையினர் அதிரடி ஆய்வு
திருத்தணி : திருத்தணி நகராட்சி செயல் அலுவலர் செண்பகராஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் கருப்பையன், மேற்பார்வையாளர் தாமுவேல் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் திருத்தணி பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினர். போலீசாரின் உதவியுடன் ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரி, பெட்டி கடைகளில் நடத்திய ஆய்வில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆய்வின்போது ஒன்றரை டன் எடை கொண்ட தரமற்ற நெய், எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளை பறிமுதல் செய்து அழித்தனர். இதுபோன்று சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறையினர் எச்சரித்தனர்.
மப்பேடு: பேரம்பாக்கம் அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள கடைகளில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் சம்பத் உத்தரவின் பேரில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அருட்செல்வி, மெய்யநாதன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை செய்தனர். அப்போது, காலாவதியான மளிகை பொருட்கள் மற்றும் தரமற்ற உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களை எச்சரித்தனர்.