தினமலர் 12.05.2010
காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
மன்னார்குடி: மன்னார்குடி பகுதி கடைகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 24 ஆயிரம் ரூபாய் மதிப்பு காலாவதியான மளிகைப்பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.மன்னார்குடி நகராட்சி ஆணையர் மதிவாணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் தேரடி, மேலராஜவீதி, பஸ்ஸ்டாண்ட் உட்பட பல பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல கடைகளில் இருந்த 24 ஆயிரம் ரூபாய் மதிப்பு காலாவதியான மளிகைப்பொருட்கள், எண்ணை, குடிநீர் பாக்கெட், பழரச பானங்கள் உட்பட உணவு பொருட்களை கைப்பற்றினர். பின்னர் அவற்றை நகராட்சி அலுவலக வாசலில் கொட்டி தீவைத்து அழித்தனர்.இதுகுறித்து ஆணையர் மதிவாணன் கூறுகையில், காலாவதியான பொருட்களை வைத்துள்ளவர்கள் தாங்களாகவே அதை விற்பனை செய்யாமல் அப்புறப்படுத்தி அழித்து விடவேண்டும். இல்லாவிடில் அதிகாரிகள் சோதனை செய்து மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.