தினமலர் 12.05.2010
மேட்டூர் கடைகளில் அதிரடி சோதனை காலாவதி உணவு பொருள் பறிமுதல்
மேட்டூர்: மேட்டூர் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எஸ்., பகுதியில் உள்ள டீக்கடை, மளிகை கடைகளில் நகராட்சி உணவு, சுகாதார ஆய்வாளர் குழுவினர் சோதனை நடத்தி 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காலாவதி உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேட்டூர் நகராட்சி உணவு ஆய்வாளர் இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர்கள் வேலவன், பாஸ்கர், சுகாதார மேற்பார்வையாளர்கள் ராபர்ட், கந்தசாமி, காளியண்ணன் குழுவினர் நேற்று மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் காலாவதியான பிஸ்கட் பாக்கெட், கூல் டிரிங்க்ஸ், ரொட்டி, காரவகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பஸ் ஸ்டாண்டில் 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்திய குழுவினர் காலாவதி உணவு பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து லாரியில் கொட்டினர். அதன் பின்னர் மேட்டூர் மெயின்ரோட்டில் உள்ள மளிகை மற்றும் டீக்கடைகள், மேட்டூர் ஆர்.எஸ்., பகுதியில் உள்ள கடைகளிலும் சோதனை நடந்தது. சோதனையின் போது 30 ஆயிரம் ரூபாய் மதிப்பு காலாவதி உணவு பொருட்களை குழுவினர் பறிமுதல் செய்தனர். ஆர்.எஸ்., பகுதியில் உள்ள சில கடைகளில் தயாரித்து பல ஆண்டுகள் ஆன மைதாமாவு பாக்கெட், டால்டா பாக்கெட், மரத்தூள் கலந்த கலப்பட டீத்தூள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. கலப்பட உணவு பொருட்கள் அனைத்தும் பள்ளம் தோண்டி பூமியில் புதைக்கப்படும் என உணவு ஆய்வாளர் தெரிவித்தார்.