தினமணி 12.05.2010
ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள காலாவதி உணவுப் பொருள்கள் அழிப்பு
திருத்துறைப்பூண்டி, மே 11: திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றின் கரையில் கிடந்த ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருள்களை நகராட்சி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை அழித்தனர்.
திருத்துறைப்பூண்டியில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து திருவாரூர் சாலையில் உள்ள பல்வேறு கடைகளிலும் நகராட்சி ஆணையர் திருமலைவாசன், துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் செவóவாய்க்கிழமை சோதனை நடத்தினர். இதில் காலாவதியான குளிர்பானங்கள், பால் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனிடையே, வேளூர் கிராமத்தில் அடப்பாற்றின் கரையில் காலாவதி பொருள்கள் கொட்டப்பட்டிருப்பதாக நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் வந்தது. இதன்பேரில், அலுவலர்கள் அங்கு சென்றபோது, அந்தப் பொருள்களை பொதுமக்கள் எடுத்து செல்ல முற்பட்டனராம். அவர்களை தடுத்து நிறுத்திய அலுவலர்கள், அந்தப் பொருள்களை எடுத்து சென்று தீயிட்டு அழித்தனர். இதைத்தொடர்ந்து, காலாவதியான உணவுப் பொருள்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்று நகராட்சி ஆணையர் திருமலைவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.