தினமலர் 14.05.2010
சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வில் காலாவதி பொருட்கள் சிக்கியது
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்பட்ட உணவுப் பொருட்களில் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.காஞ்சிபுரம் நகர்நல அலுவலர் பரணிதரன், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் குமார், அலி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வெங்கட்ராமன், காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தனி தாசில்தார் மோகன் ஆகியோர் காமராஜர் வீதியில் உள்ள சிங்கப்பூர் சீமாட்டி, வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ள காஞ்சி சூப்பர் மார்க்கெட், மேற்கு ராஜவீதியில் உள்ள மோர் சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, வத்தல், அவல், பிஸ்தா, மீல்மேக்கர், கார்ன்ப்ளேக்ஸ், மக்ரோனி, மிட்டாய், நூடுல்ஸ், மணிலா பருப்பு போன்ற உணவுப் பொருள் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். 5,000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களை நகர்நல அலுவலர் எச்சரித்துள்ளார். இந்நிலை தொடர்ந்தால் போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை மூலம் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர்(பொறுப்பு) சிவராசு தெரிவித்துள்ளார்.