தினமணி 14.05.2010
கோயம்பேடு பஸ் நிலையத்தில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதி பொருள்கள் பறிமுதல்
சென்னை, மே 13: சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 225 கிலோ எடையுள்ள காலாவதி உணவுப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோயம்பேடு பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில், பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், காலாவதியான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகளில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதில் 12 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 75 கிலோ ஐஸ்கிரீம்கள் உருகிய நிலையில் சுகாதார சீர்கேட்டுடன் இருப்பது தெரியவந்தது.
மேலும், ரொட்டி, சிப்ஸ், கார வகைகள் உள்பட 150 கிலோ எடைகொண்ட காலாவதி பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.