தினமணி 17.05.2010
காலாவதி உணவுப்பொருள் விற்பனை: தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்
ஈரோடு, மே 16: காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் குறித்து தொலைபேசி மூலம் மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
÷கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் பைகளிலும் உற்பத்தித் தேதி, எடையளவு, விற்பனை விலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதியாகும் தேதி ஆகிய விவரங்கள் குறிப்பிடப்படவேண்டும் என்று எடை மற்றும் அளவுகள் சட்டம் குறிப்பிட்டுள்ளது. இதனை மீறும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கையெடுக்கப்படும்.
காலாவதியான உணவுப்பொருட்களை அழிக்காமல் சிறு வணிகர்களிடம் விற்பனை செய்துவிடுவதாக, ஒரு சில பெரிய நிறுவனங்கள் மீது புகார் பெறப்பட்டுóள்ளது. சமூகத்தின் மீது அக்கறையில்லாமல் இவ்வாறு செயல்படும் பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி கடும் நடவடிக்கையெடுக்கப்படும்.
÷மேலும், இந்த உணவுப்பொருட்களால் நுகர்வோர் பாதிக்கப்பட்டால், நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் மூலம், உணவுப்பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களிடம் இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறித்து மாநில நுகர்வோர் சேவை மையத்துக்கு 044- 2859 2828 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட ஆட்சியருக்கு 94450 00237 என்ற செல்போன் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
÷நுகர்வோர் உடல்நலத்தைப் பாதுகாத்திட, ஈரோடு மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு, காலாவதி பொருட்கள் விற்பனை, கலப்படம் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையெடுக்கப்படும், என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.