தினமலர் 18.05.2010
திறந்த வெளியில் ஆடு அறுத்து விற்பனை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி : திறந்த வெளியில் ஆடு அறுக்கப்பட்டதை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்த அந்த இறைச்சி முழுவதும் அப்படியே பறிமுதல் செய்யப்பட்டு உரக்கிடங்கில் பினாயில் ஊற்றி புதைக்கப்பட்டன.தூத்துக்குடி மாநகராட்சி பூபால்ராயபுரம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் ஆடுகள் அறுக்கப்படுவதாக மாநகராட்சி சுகாதார பிரிவுக்கு புகார் வந்தது. இதனை தெடார்ந்து மாநகராட்சி சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி தலைமையில் சுகாதார ஆய்வாளர் முருகேசன், சுகாதார மேற்பார்வையாளர் ஜேசுஅந்தோணி ஆகியோர் அந்த பகுதிக்கு திடீரென சென்றனர். பூபால்ராயபுரம் கருப்பட்டி சொசைட்டி அருகே உள்ள ஆடு இறைச்சி விற்பனை செய்யும் கடையின் எதிரே திறந்த வெளியில் வைத்து ஆட்டை வெட்டி, உறித்து வியாபாரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. திறந்த வெளியில் சுகாதாரமற்ற முறையில் ஆடுகளை வெட்டக் கூடாது என்று பல முறை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு செய்தும், அதனை கண்டு கொள்ளாமல் திறந்த வெளியில் ஆட்டை வெட்டியதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்ததால், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆடு இறைச்சி முழுவதையும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த கடை உரிமையாளரை மாநகராட்சி சுகாதார அதிகாரி திருமால்சாமி எச்சரித்தார். ஆடுகளை மாநகராட்சி ஆடடிக்கு இடத்தில் வைத்து வெட்டிக் கொண்டு வந்து தான் விற்பனை செய்ய வேண்டும். திறந்த வெளியில் வெட்டக் கூடாது. இது தான் கடைசி முறையாகும். இனிமேல் இது போன்ற தவறு நடந்தால் கேஸ் போட்டு விடுவோம் என்று கூறினார். அதற்கு அந்த கடைக்காரர் இனிமேல் திறந்த வெளியில் ஆட்டை வெட்டமாட்டோம். மாநகராட்சி ஆடடிக்கும் இடத்தில் வெட்டுவோம் என்று கூறினர்.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சி மீது பினாயில் ஊற்றி மாநகராட்சி குப்பை கிடங்கில் அதனை தோண்டி புதைத்தனர். பூபால்ராயபுரம் இறை ச்சி கடையில் நடந்த அதிரடி சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.