தினமலர் 15.05.2010
நல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு
திருப்பூர் : நல்லூர் நகராட்சி மற்றும் வீரபாண்டி ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நேற்று மேற் கொண்ட ஆய்வில், 36 கிலோ காலாவதி உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.காலாவதியான மருந்து மற்றும் உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க, மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி மற்றும் 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் ஏற்கனவே ஆய்வு நடத்தப்பட்டது.நல்லூர் நகராட்சி, வீரபாண்டி ஊராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு நடந்தது. மங்கலம் சுகாதார மருத்துவ அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். பேக்கரி, ஓட்டல், மளிகை கடைகள் என, ஒன்பது இடங்களில் ஆய்வு நடந்தது.வீரபாண்டியில் ஒரு இடத்திலும், நல்லூரில் எட்டு இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. 4.5 லிட்டர் எண்ணெய் பொருட்கள், 15 ரொட்டி பாக்கெட், 36 கிலோ இதர உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டன.
இவற்றின் மதிப்பு 3,790 ரூபாய். பொது இடங்களில் புகைபிடித்த ஐந்து நபர்களுக்கு, தலா 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. உடனடியாக ரசீது வழங்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது; வரும் நாட்களில் அடிக்கடி ஆய்வுகள் நடக்கும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.ஆய்வில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியம், முதல்நிலை சுகாதார ஆய்வாளர் ராஜூ, சுகாதார ஆய்வாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர