தினமலர் 15.05.2010
தரமற்ற உணவுப் பொருட்கள் அழிப்பு
திருத்தணி: திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தரமற்ற உணவுப் பொருட்களை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சம்பத், உணவு ஆய்வாளர்கள் பிரபாகர், சிவக்குமார், முருகன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பையன் உட்பட 15 பேர் அடங்கிய குழுவினர் நேற்று திருத்தணியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம், அரக்கோணம் சாலை, ம.பொ.சி., சாலை உட்பட பல பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள், இனிப்பு கடைகள், டீக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். தரமற்ற குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், டீத்தூள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
பள்ளிப்பட்டு: இதேபோல் ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் அரசு மருத்துவர்கள் காந்திமதி, பாலன் ஆகியோர் தலைமையில் ஆர்.கே.பேட்டை, சராத்தூர், ராஜாநகரம், அம்மையார்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். சோதனையில் தரமற்ற குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள், குடிநீர் பாக்கெட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.