தினமலர் 15.05.2010
புரோட்டா கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்றிரவு மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் புரோட்டா கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். சுகாதாரமற்ற முறையில் மூடி வைக்காமல் இருந்த சால்னா, திறந்த வெளியில் இருந்த புரோட்டா மாவுகள், ரொட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் (பொ) ராஜகோபாலன் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறையினர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு புரோட்டா கடைகளில் சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சுகாதார அதிகாரி திருமால்சாமி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செல்வஜெயபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, ராஜசேகர், பீட்டர், ராமகிருஷ்ணன், அரிகணேசன், சந்திரமோகன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் கொண்ட குழுவினர் பாளையங்கோட்டை ரோடு, தேவர்புரம் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள புரோட்டா கடைகளில் சோதனை நடத்தினர். எந்தவித சுகாதாரமும் இல்லாமல், காலாவதியான எண்ணெய், மாவு போன்றவை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் மூடி வைக்கப்படாமல் இருந்த சால்னா, புரோட்டா மாவு, காலாவதியான பாமாயில் பாக்கெட்கள், காலாவதியான தேதி எதுவும் இல்லாத மைதாமாவு போன்றவை கடைகளில் இருந்து பறிமுதல் செய்தனர்.