தினமலர் 20.05.2010
தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் வாய்க்காலை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சுற்றுச் சுவர் ஓரத்தில் செல்லும் கழிவு நீர் கால்வாயில் ஏராளமான கழிவுகள் அடைத் துள்ளன. அங்கு தேங்கிய கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாய சூழல் நிலவுகிறது. கழிவு நீர் கால்வாய் ஓரத்தில் வரிசையாக சாலையோர கடைகள் உள்ளது.நகரின் முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலையில், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள சாலையில் நோய் பரவும் அபாயத்துடன் காட்சி தரும் கழிவு நீர் கால் வாயை சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன் இதனை சரி செய்ய வேண்டியது அவசியம். தாமதம் செய்தால் மாணவ, மாணவிகளுக்கு நோய் பரவும் ஆபத்தும் உள்ளது.