Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உணவுப் பொருளில் கலப்படம்: கடைகளில் ஆய்வு

Print PDF

தினமணி     20.05.2010

உணவுப் பொருளில் கலப்படம்: கடைகளில் ஆய்வு

தேனி, மே 19: தேனியில் கடைகளில் கலப்பட உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை நடைபெறுவது குறித்து, நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி, மூன்று குளிர்பானக் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

தேனியில் கலப்பட உணவுப் பொருள் விற்பனை குறித்து, நகராட்சி ஆணையர் மோனி உத்தரவில், சுகாதார அலுவலர் தயாளன், உணவு ஆய்வாளர்கள் அறிவுச்செல்வம், முத்துக்கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சுருளிநாதன் ஆகியோர் சோதனை நடத்தினர்.

பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள பழக்கடைகள், பழச்சாறு விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தியதில், மெழுகு பூசப்பட்ட வாஷிங்டன் ஆப்பிள்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டறிந்து, 100 கிலோ ஆப்பிள்களை பறிமுதல் செய்தனர்.

குளிர்பான உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தியதில், பிரபல கம்பெனிகளின் லேபிள் உள்ள பாட்டில்களில் போலி குளிர்பானங்களை அடைத்து வைத்து விற்பனை செய்வதும், தரமற்ற முறையில் குளிர்பானங்களை உற்பத்தி செய்வதும் தெரியவந்தது.

சுகாதாரமற்ற முறையில் குளிர்பான உற்பத்தி செய்ததாக, கோட்டைக்களம் பகுதியில் உள்ள இரண்டு ஐஸ் கடைகள் மற்றும் அண்ணாநகரில் ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

அதிகாரிகளின் சோதனை எதிரொலியாக, தேனியிலுள்ள கடைக்காரர்கள் சிலர் மதுரை சாலையில் உள்ள ராஜாக்குளம் பகுதியில் காலாவதியான பிஸ்கெட், சமையல் எண்ணைய் பாக்கெட்கள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களைக் கொட்டிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இவற்றை போலீஸôர் பார்வையிட்டு நகராட்சிப் பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.