தினகரன் 21.05.2010
பணகுடி பகுதியில் கைப்பற்றப்பட்ட காலாவதியான பொருட்கள் தீ வைத்து அழிப்பு
பணகுடி, மே 21: மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து பணகுடி பகுதியிலுள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர்.
அப்போது காலாவதியான பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம், மாவு பொருட்கள், எண்ணெய் மற்றும் குளிர்பானம் என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றி பணகுடி ஆரம்ப சுகாதார மருத்துவமனையின் பின்புறம் தீயிட்டு அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைகாரர்களுக்கு காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதுகுறித்து மருத்துவ அலுவலர் சிவக்குமார் கூறுகையில், ‘பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அதில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவற்றை சரிபார்த்து வாங்கவேண்டும். காலாவதியான பொருட்களை வாங்கி உண்பதால் வயிற்று போக்கு, வாந்தி மற்றும் பல்வேறு உபாதைகள் ஏற்படக்கூடும். எனவே விழிப்புணர்வுடன் பொருட்களை வாங்கவேண்டும்.
கடைக்காரர் காலாவதியான பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கொடுத்து உடனடியாக மாற்றிக்கொள்ளவேண்டும். இதுபோன்ற தவறுகள் நடக்கும் பட்சத்தில் துறை வாரியான நீதிமன்ற நடவடிக்கை மற்றும் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்’ என்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் பாலசந்தர், சுகாதார ஆய்வாளர்கள் ரகுபதி, மோரீஸ், சந்திரசேகரன், ராமகிருஷ்ணன், ராஜன், பாலசுப்பிரமணியன், தங்கமாரியப்பன், பணகுடி துப்புரவு மேற்பார்வையாளர் கலைக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.