தினமணி 24.05.2010
ராமநாதபுரம், பரமக்குடி நகர மக்கள் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டுகோள்
ராமநாதபுரம், மே 23: கோடை காலமாக இருப்பதால், தொற்று நோய்கள் பரவாமல் இருக்க விநியோகிக்கப்படும் குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிப் பருகுமாறு ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் முஜ்புர் ரகுமான் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட, மிகவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தற்போது கோடை காலமாக இருப்பதால், எந்த விதமான தொற்றுநோய்களும் பரவி விடாமல் இருக்க விநியோகிக்கப்படும் குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிப் பருகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ராமநாதபுரம் நகரில் தனியார் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை வாங்கிப் பருக வேண்டாம் எனவும் நகராட்சி ஆணையாளர் முஜ்புர் ரகுமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
பரமக்குடி: பரமக்குடி நகராட்சியைச் சேர்ந்த 36 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரைப் பருகவும்; சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறும் நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா முனியசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் தொற்று நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ள குடிநீரை காய்ச்சி வடிகட்டி பருகவேண்டும்.
மேலும் வீட்டின் சுற்றுப்புரத்தைத் தூய்மையாகவும், தெருக்களில் பிளாஸ்டிக் பை மற்றும் குப்பைகளை கொட்டாமலும், வீட்டின் குப்பை மற்றும் கழிவுகளை நகராட் சியிலிருந்து குப்பை வாங்க வருபவர்களிடம் கொடுத்தோ அல்லது தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளிலோ கொட்ட வேண்டும்.