Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாவட்டம் முழுவதும் நாளை தூய்மைப் பணி தொடக்கம்

Print PDF

தினமணி    24.05.2010

மதுரை மாவட்டம் முழுவதும் நாளை தூய்மைப் பணி தொடக்கம்

மதுரை, மே 23: மதுரை மாவட்டம் முழுவதும் மே 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதையடுத்து மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மே 25 முதல் 28-ம் தேதி வரை கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகிய இடங்களில் குப்பைகளை அகற்றி மாவட்டம் முழுவதும் தூய்மையாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மே 25-ம் தேதி மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலமும், மே 26-ல் கிழக்கு மண்டலமும், மே 27-ல் மேற்கு மண்டலமும், மே 28-ல் தெற்கு மண்டலத்திலும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

அதே நேரத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும்.

இதே போன்று தூய்மைப்படுத்தும் பணி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டவுடன் மாணவ, மாணவியர் ஒத்துழைப்புடன் பள்ளி, கல்லூரி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Last Updated on Tuesday, 25 May 2010 04:18