தினகரன் 25.05.2010
சுற்றுப்புற சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்
ஆற்காடு, மே 25: சுற்றுப்புற சுகாதாரத்தை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் சுகாதார துறை சார்பில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் தலைமை தாங்கினார். ஆணையாளர் செ. பாரிஜாதம் முன்னிலை வகித்தார். மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கோபால ரத்தினம் வரவேற்றார்.
மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர். சுரேஷ் கலந்து கொண்டு பேசினார். அவா¢ பேசியது: ஒவ்வொரு நோய்க்கும் தேசிய அளவிலான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்படுகிறது.
3000 வகை கொசுக்கள் உள்ளது. இந்தியாவில் 10 வகை கொசுக்கள் மட்டுமே மனிதனுக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. பிறந்து 30 நாட்களே வாழும் கொசுக்கள் தற்போது உலகையே ஆட்டிப்படைக்கிறது. வயல்வெளியில் உருவாகும் கொசுக்கள் ஏற்படுத்தும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய்க்கு திருவண்ணாமலை, தஞ்சாவூரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்திலும் விரைவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா நோய்களுக்கு இதுவரை மருந்தோ, மாத்திரையோ கண்டுப்பிடிக்கப்படவில்லை. வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்தால் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுப்புற சுகாதாரத்தை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு வந்தால் மட்டுமே சுகாதாரத்தை ஏற்படுத்த முடியும். இந்தாண்டு தமிழக அரசு நகர் புற சுகாதார இயக்கம் ஏற்படுத்த உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவுன்சிலர்கள் நந்தகுமார், சுந்தரம், செல்வம், பூங்காவனம், தயாளன், ஜீவமணி, புதுப்பாடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மேற்பார்வையாளர் பரசுராமன், சுகாதார ஆய்வாளர் ஜி. ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். துணை இயக்குநர் பேச்சு