தினமணி 28.05.2010
ஹோட்டல்கள், உணவு விடுதிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
அரியலூர், மே 27: அரியலூரில் இயங்கி வரும் ஹோட்டல்கள், உணவு விடுதிகள், தேநீர் கடைகளுக்கு ஆட்சியர் த. ஆபிரகாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், உணவு விடுதிகள், தேநீர் கடைகள் ஆகிய அனைத்தும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பயன்படுத்திய டம்ளர்களை 20 நிமிஷங்கள் கொதி நீரில் கொதிக்க வைத்த பிறமே மறுபடியும் உபயோகிக்க வேண்டும். உணவுப் பொருள்களை தூசி படாமலும், ஈ மொய்க்காமலும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
சாப்பிட்ட பின் இலைகளை வெளியில் வீசாமல், மூடியிட்ட கூடையில் சேகரித்து முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். கழிவுநீரை தெருக்களில் விடாமல், உறிஞ்சு குழி மூலம் வெளியேற்ற வேண்டும். உணவுப் பொருள்களை கையாள்பவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும்.
உணவு தயாரிப்புக் கூடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், கழிவுநீர், குப்பைகள் தேங்காமல் பராமரிக்கப்பட வேண்டும். உணவு பரிமாறுவோர் கையுறை அணிந்திருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் ஆட்சியர்.