தினமணி 28.05.2010
குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுகோள்
சேலம், மே 27: நோய் பரவும் வாய்ப்புள்ளதால் குடிநீரை காய்ச்சிப் பருக வேண்டும் என்று, மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் மழைக் காலத்தில் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், ஆணையர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி செயற் பொறியாளர்கள், மாநகர நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆணையர் பேசும்போது, குடிநீர் விநியோகத்தின்போது பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடர் ஐ.எஸ்.ஐ. தரம் உள்ளதாகவும் அதில் 32 சதவீதம் குளோரினும் இருக்க வேண்டும்.
ஒரு வாரம் அல்லது அதிகபட்சம் 10 நாள்களுக்கு மட்டும் இருப்பு இருக்கும் வகையில் பிளீச்சிங் பவுடரை வாங்கி, காற்றுப் புகாதபடி சரியான முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும்.
குடிநீர் விநியோகத்தின் கடைசிப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் தேவையான குளோரின் அளவு இருக்குமாறு குளோரினேற்றம் செய்யப்பட வேண்டும். பொதுமக்கள், குடிநீரை காய்ச்சிய பிறகே குடிக்கப் பயன்படுத்த வேண்டும் என்று பழனிசாமி தெரிவித்தார்.