தினமணி 28.05.2010
மேற்கு மண்டலத்தில் தூய்மையாக்கும் திட்டம்
மதுரை, மே 27: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உள்ள ஆரப்பாளையம் காமராஜர் பாலத்தில், தூய்மையாக்கும் திட்ட முகாமை துணை ஆணையர் க.தர்ப்பகராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மண்டலத் தலைவர் கே.நாகராஜன் முன்னிலை வகித்தார்.
இது குறித்து துணை ஆணையர் க.தர்ப்பகராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரை நகரை தூய்மையாக்கும் வகையில் இந்தத் திட்டம் பொதுமக்கள் ஆதரவுடன் மாநகராட்சிப் பகுதிகளில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வார்டுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. மேற்கு மண்டலத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், 58 லாரிகள் மற்றும் பொக்லைன் வண்டிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இதேபோல் மற்ற மண்டலங்களிலும் இந்தச் சிறப்பு முகாம்களை நடத்தி குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே நகரை சுத்தப்படுத்தும் பணியில் பொதுமக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைகளை கழவுநீர்க் கால்வாய்களில் கொட்டாமல் குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சிலுவை, அருண்குமார், நகர்நல அலுவலர் மருத்துவர் சுப்பிரமணியன், உதவி ஆணையர்கள் ரவீந்திரன், ராஜகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.