தினகரன் 28.06.2010
சேலம் மாநகராட்சியில் குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்த ‘ஐஎஸ்ஐ’ தரமுள்ள பிளீச்சிங் பவுடர்
சேலம், மே 28: சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் தொட்டிகளை சுத்தப்படுத்த ‘ஐஎஸ்ஐ’ தரமுள்ள பிளீச்சிங் பவுடர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் ஆணையாளர் பழனிசாமி தலைமையில் நடந்தது. இதில் மாநகர் நலஅலுவலர் பொற்கொடி, செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆணையாளர் பழனிசாமி பேசும் போது, ‘‘குடிநீர் விநியோக தொட்டிகளை சுத்தப்படுத்த ‘ஐஎஸ்ஐ’ தரமுள்ள பிளீச்சிங் பவுடர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் குளோரின் அளவு கண்டிப்பாக 32 சதவீதம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ‘‘பிளீச்சிங் பவுடரை ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைக்கும் வகையில் வாங்க வேண்டும். பவுடர் பைகளை காற்று புகாத வண்ணம் பாதுகாத்து வைக்க வேண்டும். குடிநீர் விநியோகத்தின் கடைசி பகுதிவரை தொட்டிகளில் குளோரினேற்றம் செய்ய வேண்டும்’’ என்றும் கேட்டுக்கொண்டார். இதேபோல், பொதுமக்கள் மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சி குடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆணையர் கேட்டுக்கொண்டார்.